மதுரை மே.26- நகைக் கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு என சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விதிமுறைகளைத் திரும்பப்பெற வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ச் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்;
கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.
எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார்.